<$BlogRSDUrl$>
Tamil Blogs Wiki

Tamil Bloggers Database

Enter Record

View/ Search

Saturday, October 11, 2003

கண்ணோட்டம்...

 
இந்த வாரம் வாத்தியார் வேலையை (அதாங்க Editor வேலை) செய்ததில் பல விஷயங்கள் கவனத்திற்கு வந்திருக்கின்றன.

முதலில் தமிழ் எழுத்துரு தெரிவதில் பிரச்சினை. மதி யவர்களின் யோசனைப்படி சில சோதனைகள் செய்து பார்த்தேன், இது வரை தோல்வியே. இந்த வாரம் பேஜர் ஓயாமல் கத்திக் கொண்டிருப்பதால் முழுமையாக என்னால் சோதித்துப் பார்க்க முடியவில்லை. வரும் வாரத்தில் முயற்சி செய்கிறேன்.

இரண்டாவது, பலருடைய வலைப்பதிவுகள் இன்னும் தூங்கிக் கொண்டிருக்கின்றன. நேரமின்மையோ சோம்பலோ காரணமாக இருக்கலாம். இருப்பினும் இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு முறையேனும் எழுதினால் நன்றாக இருக்கும்.

இதற்கு இன்னொரு கோணமும் இருக்கிறது. 'ஆமா, என்னத்த எழுதி என்னத்த பண்ண, எத்தனை பேர் படிக்கிறார்கள்?' என்ற எண்ணமும் ஒரு காரணம். இதற்கு ஒரே வழி, நீங்கள் யாருடைய வலைப்பதிவையாவது படித்தால், ஒற்றை வார்த்தையிலாவது உங்கள் கருத்தை சொல்லி விடுங்கள். அது எழுதுபவற்கு ஒரு பூஸ்ட் சாப்பிட்ட மாதிரி! (என்னுடைய வலைப்பதிவை Rediff-க்கு மாற்ற முக்கிய காரணம்)

அமல சிங் அவர்கள் பரிந்துரைப்பது போல் தமிழ் வலைப்பத்திவாளர்கள் குழு ஒன்று ஆரம்பிக்கலாம், தொழில்நுட்ப நுணுக்கங்களை பரிமாறிக் கொள்ளலாம். இதில் அனைவருடைய பங்கு பெறுதல் மிக அவசியம். Windows XP வைத்திருக்கும் என் போன்றவர்களுக்கு பிரச்சினை அதிகம் வருவதில்லை. Windows 98/Me/NT/2000 வைத்திருக்கும் நண்பர்களின் பங்கு மிக அவசியமாகிறது, அவர்கள்தான் சோதனை களம்.

வலைப்பதிவாளர்கள் பட்டியலில் இரண்டு நாட்களாக சிலருடைய பெயர்களுக்கு பக்கத்தில் சிவப்பு விளக்கு ஒன்று சுழன்று கொண்டிருக்கிறது. என்ன இவர்கள் எல்லாம் 'பாய்ஸ்' படம் பார்த்ததால் ரெட் கார்ட் கொடுத்து விட்டாரா நடுவர் மதி என்று நினைத்தேன். அதெல்லாம் ஒன்றுமில்லையாம், 'இன்று புதிதாய்' என்ற போர்டாம் அது. மிகச்சிரத்தையெடுத்து செய்திருக்கிறார்!

குழு ஒன்று ஆரம்பித்தால் இந்த சிரமத்தைக் குறைத்துக் கொள்ளலாம். நீங்கள் வலைப்பதிவு செய்தவுடன் 'படம் ரிலீஸ் ஆயாச்சு, முதல் டிக்கெட் எடுப்பவர்களுக்கு ஒரு தங்க மோதிரம் பரிசு' என்று குழுவுக்கு ஒரு பிட் நோட்டீஸ் அனுப்பினால் போதும், எல்லாரும் விழுந்தடித்துக் கொண்டு ஓடுவார்கள்.

தடங்கல்கள் இல்லாத வழியென்று ஒன்று இருக்கிறதா என்ன?

எண்ணித் துணிகக் கருமம் துணிந்தபின், எண்ணுவம் என்பது இழுக்கல்லவோ?

Opinions welcomed

 


பரி, நடுவில் குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும்.

நண்பர்களே, வலைப்பதிவில் ஈடுபட்டிருப்பவர்களுக்காக ஒரு யாகூ குழுமம் தொடங்கி, அதில் வலைப்பதிவுகள், அதன் தொழில்நுட்பங்கள் பற்றிப்பேசுவது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

அமல சிங், இந்த யோசனையை சொன்னதற்கு நன்றி.


Thursday, October 09, 2003

சுற்றுலா...

 
இந்த வாரம் சுற்றுலா வா....ஆ....ஆ... ரம் நண்பர்களே :-). ஆம், சுபா அவர்கள் தனது இத்தாலிய பயணத்தைப் பற்றி கிட்டத்தட்ட ஒரு டைரிக் குறிப்பு போலவே எழுதியிருக்கிறார். இத்தாலிய மொழி தெரியாமல் அவர் பட்ட பாட்டையும், இத்தாலியர்கள் எப்படி 'தொண தொண'வென்று பேசுகிறார்கள் என்பதைப் பற்றியும் எழுதியிருக்கிறார்.

ஐரோப்பா முழுவதுமே அழகான சுற்றுலாத் தளங்கள் நிறைந்த இடம். எங்கு பார்த்தாலும் பச்சைப் பசேலென இருக்கும் இடங்களைப் பார்த்தாலே மனதுக்கு இதமாக இருக்கும். பச்சை நிறம் பிடிக்காதவர்கள் இருக்க முடியுமா என்ன? (உங்களுக்கு பச்சை கலர் ஜாங்கிரி ஞாபகம் வந்தால் நான் பொறுப்பல்ல).

பச்சைப் பசேலென இருக்கும் தஞ்சை, கும்பகோணம், மாயவரம் நெல் வயல்களை ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் பாருங்கள் (காவிரியில் தண்ணீர் வரும் பட்சத்தில்). கோடைக் காலத்தில் அமெரிக்காவின் மத்திய மாநிலங்களில், கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியும் சோள, சோயா வயல்களைப் பாருங்கள். ஐரோப்பாவில் ரயிலில் பயணம் செய்து பச்சைப் புல்வெளிகளையும் அங்கு மேயும் செம்மறியாடுகளையும், பசுக்களையும் பாருங்கள்.
அடடா என்ன இது "பச்சை நிறமே பச்சை நிறமே, இச்சை ஊட்டும் பச்சை நிறமே" என்று பாடத் தோன்றுகிறதே!
(எதுவுமே பார்க்க முடியவில்லையா, டீவியில் கோல்ஃப் (Golf) விளையாட்டைப் பாருங்கள் :-) )

மீண்டும் இத்தாலிக்கு வருவோம். பீட்ஸா, பாஸ்தா போன்ற உணவுகளின் பிறப்பிடம். தோல் பொருட்களுக்கு பெயர்போன ஊர். ஆடை வடிவமைக்கும் டிசைனர்களுக்கும் பெயர் போனது, அதாவது ஒரு காலத்தில். இப்போது என்ன நடக்கிறது தெரியுமா? இந்தியாவிலிருந்து வாங்கி இத்தாலிய முத்திரை குத்தி விற்கிறார்கள்.

அயர்லாந்து, இத்தாலி இந்திய தேசியக் கொடிகளுக்கிடையே இருக்கும் ஒற்றுமை வேற்றுமைகளை நீங்களே தெரிந்து கொள்ளுங்களேன்!

இத்தாலியே ஒரு துக்கினியூண்டு நாடு, அதனுள் ஒரு துக்கினியூண்டு இன்னொரு நாடே இருக்கிறது தெரியுமா? வாட்டிகன் நகரம் (Vatican City) என்ற 'நாடு'தான் அது. அதன் தலைவர் போப்.

Wednesday, October 08, 2003

Work is still going on ( as of 21.30 EST 10.09.03)

 
Folks,
working on Dynamic encoding.
Please tell me if it's working or not. Esp. those with Win 98 machines.

thanks!

Tuesday, October 07, 2003

ஹைக்கூ

 
ஹைக்கூ பற்றி ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையே இட்டிருக்கிறார் சந்திரவதனா. பொதுவாக கவிதையில் எனக்கு அவ்வளவு ஆர்வம் இல்லை. எனக்குத் தெரிந்த கவிதையெல்லாம் திரையிசைப் பாடல்கள்தான். பாரதி கவிதைகள் கூட பாட்டாகத்தான் தெரியும். கவிதை பற்றி 'அ' னா, 'ஆ'வன்னாவிலிருந்து படிக்க ஆரம்பிக்க வேண்டும்.

இன்று உற்சாகமான நாள் இல்லை எனக்கு, இத்தோடு முடித்துக் கொள்கிறேன்.

Monday, October 06, 2003

மலிவு விலையில் கணினி மற்றும் கடினச் சொற்கள்

 
திரு. இராம.கி அவர்கள் தமிழ்நாட்டில் (சென்னை என்று நினைக்கிறேன்) ரூ.500-க்கு கணினி கிடைக்கும் விளம்பரத்தை பார்த்ததாக எழுதியிருக்கிறார். ஒரு நல்ல கணினி வாங்குவதற்கு குறைந்தபட்சம் ரூ.20000 ஆகும் இந்தியாவில் இது எப்படி சாத்தியமாகிறது என்பது ஒரு புதிர். இந்த மாதிரி கணினியை யாரேனும் வாங்கினார்களா, தரம் எப்படியுள்ளது என்பதை யாரேனும் தெரிந்தவர்கள் சொல்லலாம்.

தமிழ்நாட்டில் ஏமாற்றுக்காரர்கள் வேலை எல்லோரும் அறிந்ததே. ஃபைனான்ஸ் கம்பெனிகாரர்கள் பணத்தைச் சுருட்டிக் கொண்டு ஓடிய மாதிரி இதுவும் இருக்கும் வாய்ப்புகள் உண்டு. கவனமாக இருக்க வேண்டும்.

இவரது எழுத்தில் காணும் புதிய தமிழ்ச் சொற்கள் சாதாரண எழுத்து நடையில் எங்கும் பார்த்ததில்லை. பல பதங்களுக்கு உரை தேவைப்படுகிறது. உதாரணமாக marketing technic என்பதை விளம்பர யுத்தி என்றால் அனைவருக்கும் புரியும் என்று நினைக்கிறேன். இதை "மாறுகூற்று உத்தி" என்கிறார். இப்படி பல வார்த்தைகள்.

keyboard-க்கு விசைப்பலகை, தட்டச்சுப் பலகை என பலரறிந்த சொற்கள் இருக்கும் போது "குயவுப் பலகை" என்ற புதுச் சொல் கொண்டு வருகிறார். எனக்கென்னவோ இது ஒரு அதீத நிலை (extreme case) என்று தோன்றுகிறது.

அவருடைய வலைப்பதிவை என்னால் நேரடியாக படிக்க முடியவில்லை. சுரதாவின் செயலி கொண்டுதான் படிக்க முடிந்தது. இதைப் பற்றிய மற்றும் வலைப்பதிவு பற்றிய சில நுண்ணிய விவரங்களை எழுத நாளை முயல்கிறேன்.

Sunday, October 05, 2003

பாதாளத்தில் தமிழ்

 
என்னடா பேஜாரான தலைப்பா இருக்கேன்னு பாக்கறீங்களா? ஆமாங்க லண்டன் பாதாள ரயிலில் (London tube) உலக கவிதைகள் பலவற்றையும் ஒட்டி வைத்திருக்கிறார்கள். குறுந்தொகையில் வரும்


"யாயும் யாயும் யாராகியரோ
வெந்தையு நுந்தையு மெம்முறைக் கேளிர்
யானு நீயு மெவ்வழி யறிதுஞ்
செம்புலப் பெய்ந்நீர் போல
வன்புடை நெஞ்சந் தாங்கலந்தனவே"

என்ற பாடலையும் அதன் மொழி பெயர்ப்பையும் லண்டன் பாதாள ரயிலில் எழுதப் பட்டிருக்கும் படத்தை நா.கண்ணன் அவர்களின் வலைப்பதிவில் காணலாம்.

படத்தின் இடப்பக்கம் இருக்கும் கோலம் கல்கி அவர்களின் துணைவியார் வரைந்தது (தகவல் நன்றி: இரா.மு).

இந்த பாடலில் இரு வரிகள் உங்களுக்கு பரிச்சயமானவை, நீங்கள் திரையிசை ரசிகர் என்றால். இருவர் படத்தில் வரும் நறுமுகையே பாடலின் இரண்டாம் சரணத்தில், வைரமுத்து முதல் மற்றும் மூன்றாம் வரிகளை நுழைத்திருப்பார்.

மான்செஸ்டரில் இருந்தபோது லண்டனைச் சுற்றிப் பார்க்க ஒரே ஒரு வார இறுதி மட்டும் கிடைத்தது. முடிந்தவரைச் சுற்றினோம். உலகின் மிகப் பழமையான, அதிகம் அதிகப்பட்ட நகரங்களில் லண்டனும் ஒன்று. "லண்டன் எங்கிருக்கிறது?" என்று கேட்டால் ஜார்ஜ் புஷ் கூட சரியாகச் சொல்லிவிடுவார்!

லண்டன் வருமானத்தின் கணிசமான ஒரு பகுதி சுற்றுலாவிலிருந்து வருகிறது. அதற்கு டியூப் எனப்படும் இந்த பாதாள ரயிலின் பங்கு மிக முக்கியமானது. பாதாள ரயில் வரைபடத்தை எடுத்துக் கொண்டால் நீங்கள் தொலைந்து போக வாய்ப்பே இல்லை.

லண்டனின் பல சுற்றுலாத் தலங்கள் தேம்ஸ் நதியை ஒட்டியே அமைந்திருக்கும். Big Ben, அங்கிருந்து கூப்பிடு தூரத்தில் Trafalgar Square, பார்லிமெண்ட்; அக்கரையில் லண்டன் ஐ எனப்படும் ஆமை வேகத்தில் நகர்ந்து, லண்டன் முழுவதையும் ஒரே பார்வையில் பார்க்க பெரிய சுழல் சக்கரம். லண்டன் டவர், டவர் பிரிட்ஜ் (அதாங்க கப்பல் போறதுக்கு 'ஆ'ன்னு வாய் பிளக்குமே) இப்படி எல்லாமே.

பீக்கடில்லி சர்க்கஸ் (நம்ம ஊர் ரவுண்டானா அங்கே சர்க்கஸ்) பெரிய ஷாப்பிங் இடம், மெழுகு பொம்மைகளுக்கு பெயர் போன மேடம் டுஸ்ஸாட் என்று பல இடங்கள் உண்டு. பக்கிங்ஹாம் அரண்மனையைப் பார்க்க போனீர்களானால் வெளியிலிருந்தே பார்த்துவிட்டு வந்து விடுங்கள். உள்ளே 10 பவுண்டுக்கு பெரிதாக ஒன்றுமில்லை. என்னைப் பொறுத்தவரை மைசூர் அரண்மனையில் கால் தூசு பெறாது அது. நாங்கள் போன தினத்தில் change of guard எனப்படும் காவலாளிகள் மாற்றம் இல்லை.

லண்டனிலிருந்து பாரிஸுக்கு ஆங்கிலக் கால்வாயினடியில் (English Channel) செல்லும் ரயில் வாட்டர்லூ ஸ்டேஷனிலிருந்து புறப்படும். ரயிலின் உள்ளே எப்படி இருக்கிறதென்று எட்டிப் பார்க்க ஆசையாயிருந்தது, பயத்தினால் பார்க்கவில்லை.

கையில் கணிசமான பணமிருந்தால் எல்லா இடங்களையும் சுற்றிப் பார்க்கலாம். எல்லா இடங்களிலும் குறைந்த பட்ச நுழைவுக் கட்டணம் 10 பவுண்டு இருக்கும்.

 

இந்த வாரம் வலைப்பூவை பராமரிக்கப்போகிறவர் பரிமேழகர்.


 

கடந்த வார வாலைப்பூவை சிறப்பாக வடிவமைத்தமைக்கு நன்றி மீனாக்ஸ்.


This page is powered by Blogger. Isn't yours? Feedback by backBlog Trackback by HaloScan.com